கடத்தூர், அக். 28 -
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தில், அரசு நூலகம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடமாக பயன்படுத்தப்பட்ட நிலம் தனிநபரின் பெயரில் பட்டா வழங்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2005–2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ரூ. 1.10 லட்சம் நிதி ஒதுக்கி மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தை அமைத்தது. அங்கு தொடர்ந்து அரசு நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது. ஆனால், அதே இடம் தனிநபரின் சொந்த நிலம் எனக் கூறி, 2023ஆம் ஆண்டு அந்த நிலம் ரகிரயம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, அந்த நிலக்கருவை ரத்து செய்யக் கோரினர். பின்னர் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட பட்டாவை ரத்து செய்ய ஆணையிட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேற்று (அக்.26) காலை கேத்துரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக அரசு, தனியார் பஸ், கார், ஜேசிபி, டூவீலர் போன்ற வாகனங்கள் அனைத்தும் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள், “கட்டிடம் மற்றும் இடம் குறித்து விரைவில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்தனர்.

.jpg)